மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து தப்பிய கொரோனா தொற்றாளர் மடக்கி பிடிப்பு

264 0

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட  ஒருவர்,  அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் பாதுகாப்பு தரப்பினரால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் கொரோனா தொற்றாளர் ஒருவருக்கு உதவியாக அவரது மகன் குறித்த விடுதியில் தங்கி இருந்து உதவிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த உதவியாளரான மகனுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின்போது அவருக்கும் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

குறித்த விடயத்தை அறிந்த உதவியாளரான மகன், நேற்று (வியாழக்கிழமை) மதியம், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் தனிமைப்படுத்தல் விடுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.

துரித நடவடிக்கைகளை மேற்கொண்ட வைத்தியசாலை நிர்வாகம், பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் நேற்று மாலை மன்னார் எழுத்தூர் பகுதியில் வைத்து மடக்கி பிடிக்கப்பட்டார்.

மேலும் குறித்த நபரை, சிகிச்சைக்காக உரிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.