நோயற்ற, சௌபாக்கியமான வாழ்வினை தைத்திருநாள் பரிசளிக்க வேண்டும்! – மன்னார் அரச அதிபர்

218 0

உலகம் முழுவதற்கும் நோயற்ற, சௌபாக்கியமான வாழ்வினை தைத்திருநாள் பரிசளிக்க வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய கொரோனா நெருக்கடி சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு பொங்கல்  பண்டிகையை அமைதியான முறையில் கொண்டாடுமாறு அவர் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “உலகம் முழுவதும் கொரோனா தொற்று நோய் அபாயம் உச்ச அளவில் உள்ள நிலையில் தமிழர்களின் பண்பாட்டு விழாவான தைப்பொங்கலை நாம் இன்று கொண்டாடுகின்றோம்.

தைப்பொங்கல் விழாவானது மக்கள் மத்தியில் நல்ல சுகாதார, பாதுகாப்பான சுபீட்சமான ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரு சூழ் நிலையை ஏற்படுத்த வேண்டும் என வாழ்த்துகின்றேன்.

தமிழர்களின் நன்றியுணர்வை வெளிப்படுத்தும் வகையில் இயற்கைக்கும், உழவர்களுக்கும் நன்றி கூறுகின்ற ஒரு விழாவாக தைப்பொங்கல் விழா காணப்படுகின்றது. தை பிறந்தால் வழிபிறக்கும் என்பது பாரம்பரியமான நம்பிக்கை.

இந்நிலையில், மலர்ந்துள்ள தைத்திருநாள், உலகம் முழுவதற்கும் புதிய நம்பிக்கையையும், பலத்தையும் தரவேண்டும் என்பதுடன் நோயற்ற சௌபாக்கியமான வாழ்வினைப் பரிசளிக்க வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

அத்துடன், இந்த நன்நாளில் உலகத்திற்கு உணவளிக்கப் பாடுபடுகின்ற உழவர்களுக்கு நன்றியுடன் கூடிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்கின்றேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.