சடலங்களை அடக்கம் செய்வது குறித்து அல்குர் ஆனில் குறிப்பிடப்படவில்லை – கம்மன்பில

250 0

சடலங்களை அடக்கம் செய்வது குறித்து அல்குர் ஆனில் எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

இதன்போது, சமீபத்தில் நாடாளுமன்றத்தில் அல்குர்ஆன் குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள். அதனை ஆய்வு செய்தா முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்தீர்கள்? என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்து உரையாற்றும்பேதே அமைச்சர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அமைச்சர், “அல்குர்ஆனை முழுமையாக படித்த பின்னரே நான் கருத்து தெரிவித்தேன்.

அல்குர்ஆனை நான் 2 முறை வாசித்தேன். அல்குர்ஆனில் எந்தவொரு இடத்திலும் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து குறிப்பிடப்படவில்லை.

அல்குர்ஆன் தொடர்பில் நான் விசேட நிபுணர் அல்ல. விசேட நிபுணர் யாராயினும் நான் தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவிக்குமாறு நான் கோரிக்கை விடுத்திருந்தேன். குர்ஆனில் குறிப்பிட்ட பக்கத்தை சுட்டிக்காட்டி நான் இதனை தெரிவித்தேன்.

குர்ஆனில் இந்த சடல அடக்கம் குறித்து தெரிவிக்கப்பட்டிருக்குமாயின், அது குறித்து விளக்கம் அளிக்குமாறு நான் கேட்டிருந்தேன்.

ஆனால் இது குறித்து எவரும் பதிலளிக்கவில்லை. சிலர் சமூக ஊடகங்கள் மூலமாக குர்ஆன் குறித்து தகவல்கள் அனுப்பி வைத்திருந்தனர். ஆனால் அவற்றில் எதிலும் சடலங்களை அடக்கம் செய்வது குறித்து குறிப்பிடப்படவில்லை” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.