கோவிலுக்குள் பெண் பாலியல் வன்கொடுமை- 2 பேர் கைது

217 0

நாகையில் கோவிலில் வைத்து பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் அதனை தடுக்க பல்வேறு சட்டங்களை இயற்றியும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளையும் வழங்கி வருகிறது.

இருந்தபோதிலும் ஜம்மு காஷ்மீரில் கோவிலில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை, உத்தரபிரதேச மாநிலத்திலும் கோவில் முன்பு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதுபோன்ற ஒரு சம்பவம் தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

நாகை மாவட்டம் நாகை தோப்பு வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேதையன். இவரது மனைவி சந்திரா (வயது 40). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேதையன் இறந்து விட்டார்.

இதையடுத்து சந்திரா கொத்தனார் கையாள், சித்தாள் உள்ளிட்ட கிடைக்கும் கூலி வேலை பார்த்து தன் 2 மகள்களையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். வழக்கமாக ஆண் துணை இல்லாத காரணத்தால் பாதுகாப்பு கருதி இரவு நேரங்களில் தனது மகள்களுடன் அருகிலுள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்று தூங்குவது வழக்கம்.

நேற்று இரவு வெளிப்பாளையம் காமராஜர் சாலையில் உள்ள சகோதரி வீட்டுக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அருண்ராஜ் (25), ஆனந்த் (26) ஆகிய 2 வாலிபர்களின் மனதில் சபல புத்தி ஏற்பட்டு சந்திராவை பின்தொடர்ந்து சென்றனர். சிறிது நேரத்தில் சந்திராவின் வாயில் துணியால் பொத்தி அவரை சரமாரியாக தாக்கி அங்குள்ள பிள்ளையார் கோவில் வளாகத்துக்கு வலுக்கட்டாயமாக தூக்கி சென்றனர்.

இரவு நேரமானதால் அப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. இதனை சாதகமாக பயன்படுத்திய அருண்ராஜ், ஆனந்த் இருவரும் சந்திராவை கோவில் முன்பு கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இதில் சந்திரா மயங்கி விழுந்தார். அவர்கள் 2 பேரும் இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணி வரை கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு உள்ளனர்.

பின்னர் அவரை விடுவித்தனர். அலங்கோலமான நிலையில் நடக்க கூட முடியாமல் சந்திரா அங்கேயே கிடந்தார். அந்த சமயம் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் சந்திராவின் சகோதரி வீட்டுக்கும் சென்று உன் தங்கை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து வெளியில் கூறினால் உங்களை உயிரோடு விட மாட்டோம் என கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றனர்.

இதையடுத்து சந்திராவின் சகோதரி மற்றும் அவரது கணவர் பதறியடித்து கொண்டு பிள்ளையார் கோவிலுக்கு சென்றனர். அங்கு கோவில் முன்பு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மயங்கி கிடந்த சந்திராவை மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சந்திராவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து சந்திரா வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த அருண்ராஜ், ஆனந்த் ஆகிய 2 பேரையும் பிடித்து கைது செய்தார். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து வெளிப்பாளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்து தூக்கிலிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மாதர் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாகை மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.