’வன்முறை வேண்டாம்’ – அதிபர் டொனால்டு டிரம்ப் டுவீட்

268 0

பைடனுக்கு வெற்றி சான்றிதழ் அளிப்பதற்கான கூட்டம் அமெரிக்க பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அப்போது, திடீரென டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜோ  பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டன்னில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் இன்று நடைபெற்று வந்தது.

காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறைகளை மேற்கொண்ள்ளப்பட்டு வந்தது.

அப்போது, திடீரென பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைய முற்பட்டனர். இதனால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும்  இடையே மோதல் ஏற்பட்டது.

பாதுகாப்பு படையினரை மீறி நுற்றுக்கணக்கானோர் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர். இதனால், பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

அந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உயிரிழந்தார். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர தேசிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். எஃப்பிஐ அதிகாரிகளும் களமிறக்கப்பட்டனர். பாராளுமன்றத்தை சுற்றுயுள்ள பகுதிகள் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வன்முறை வேண்டாம் என டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ’அமெரிக்க பாராளுமன்ற பகுதியில் இருப்பவர்கள் அமைதியை நிலைநாட்டும்படி கேட்டுக்கொள்கிறேன். வன்முறை வேண்டாம். நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள், நாம் சட்டம் ஒழுங்கை மதிக்கும் கட்சியினர் – சட்டத்தையும், நமது நீல நிற உடையில் உள்ள சிறந்த ஆண்கள் மற்றும் பெண்களையும் மதித்து நடங்கள்’

என பதிவிட்டுள்ளார்.