பைடனின் வெற்றியை உறுதி செய்வதற்கான கூட்டம் அமெரிக்க பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. திடீரென டிரம்ப் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பாராளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் ஜனவரி 20-ம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.
தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக அவர் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். மேலும், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் குற்றம்சுமத்தி நீதிமன்றத்திலும் வழக்குத்தொடர்ந்தார். அந்த வழக்குகள் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பைடனை வெற்றியாளராக அங்கீகரிக்கும் நடைமுறை நடந்து வந்த நிலையில் திடீரென பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர். அவர்களை தடுக்க போலீசார் முயற்சித்தபோதும் அவர்களது முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
பாராளுமன்ற கட்டிடத்திற்குள் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றும் நடைமுறைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.