வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிப்பு

234 0

திருவெறும்பூர் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் நள்ளிரவில் தீவைத்து எரிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே ஆலத்தூர் காந்திநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). ரெயில்வே ஊழியர். அதே பகுதியை சேர்ந்த வாழை வியாபாரிகள் ராஜ்குமார் (40), புருஷோத்தமன் (42). மற்றும் நேதாஜிநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (43).

இந்தநிலையில் இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தனா். பின்னர், தங்கள் மோட்டார் சைக்கிளை தங்களது வீட்டின் முன் நிறுத்திவிட்டு தூங்கச்சென்றனர். நேற்று காலை எழுந்து பார்த்தபோது இவர்கள் 4 பேரின் மோட்டார் சைக்கிள்கள் தீவைத்து எரிக்கப்பட்டிருந்தன.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் யாரோ மர்ம நபர்கள் 4 மோட்டார் சைக்கிள்களுக்கும் தீவைத்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள்களுக்கு தீவைத்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.