பல இடங்களுக்கு சென்ற புலோலித் தொற்றாளர்!! – தொடர்புடையோரை இனங்காண முயற்சி!

229 0

மந்திகை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை அறிய முடியாதுள்ள நிலையில், புதிய கொரோனா கொத்தணி ஒன்று உருவாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கடந்த 2ஆம் திகதி மந்திகை ஆதார மருத்துவமனையில் தடிமன் மற்றும் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் சேர்க்கப்பட்டார். அவர் மருத்துவமனையின் 7ஆம் இலக்க விடுதியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

நேற்றுமுன்தினம் கிடைத்த பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்றை உறுதிப்படுத்த நிலைமை காணப்பட்டதை அடுத்து, அவருக்கு மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது. அந்த முடிவு நேற்றுக் கிடைத்த நிலையில், இளைஞருக்குக் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் பருத்தித்துறை, புலோலியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவராவார். இவர் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்றார். இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதில் தெளிவில்லாத நிலைமை காணப்படுகின்றது.

அவரிடம் சுகாதாரப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் 3 தினங்களுக்கு முன்னர் மருதனார்மடம் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. அங்குள்ள வாகனச் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றுக்குச் சென்றார் என்றும், அருகில் உள்ள கடை ஒன்றில் தண்ணீர் வாங்கிக் குடித்தார் என்றும் சுகாதாரப் பிரிவினரிடம் கூறியிருக்கின்றார்.

தொற்று ஏற்பட்டு 3 நாள்களுக்குள் இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதால் தொற்று எவ்வாறு ஏற்பட்டிருக்கும் என்பதில் சந்தேகங்கள் உள்ளன என்று சுகாதாரப் பிரிவினர் கூறுகின்றனர்.

தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர் பல இடங்களிலும் நடமாடியுள்ளார் என்று அறியமுடிகின்றது. பருத்தித்துறை, நெல்லியடி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அவர் நடமாடியுள்ளார் என்று முதற்கட்ட விசாரணைகளில் தெரியவருகின்றது. தொற்றாளர் நண்பர்கள் பலருடன் தொடர்பில் இருந்தார் என்று தெரியவந்ததை அடுத்து அவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவரது குடும்பத்தினரைத் தனிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், தொற்றாளர் நடமாடிய இடங்களை இனங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று சுகாதாரப் பகுதியினர் தெரிவித்தனர். தொற்றாளர் நெல்லியடியில் உள்ள டயலோக் அலுகத்துக்குச் சென்றுள்ளதால் அந்த அலுவலகம் முடக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தொற்றாளர் மந்திகை மருத்துவமனையின் விடுதியில் தங்கிச் சிகிச்சை பெற்றுள்ள நிலையில், மருத்துவர், தாதியர், சிற்றூழியர் என 7 பேர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.