சோமாலியாவில்துருக்கி நாட்டினரை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் – 3 பேர் பலி

229 0

சோமாலியாவில் துருக்கி நாட்டினரை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 3 பேர் பலியானார்கள்.

சோமாலியாவில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ‌‌ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் அங்கு போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்தும் வெளிநாட்டினரை குறிவைத்தும் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் சோமாலியா தலைநகர் மொகாதிசுவில் சாலை அமைக்கும் பணியில் துருக்கியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் ஈடுபட்டுள்ளது. எனவே அங்கு துருக்கி என்ஜினீயர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை மொகாதிசுவில் துருக்கி என்ஜினீயர்களை குறிவைத்து அல் ‌‌ஷபாப் பயங்கரவாதிகள் தற்கொலைபடை தாக்குதலை நிகழ்த்தினர். சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவர் உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்து வெடிக்கச் செய்தார்.

இந்த குண்டுவெடிப்பில் துருக்கி அதிகாரி ஒருவரும் சோமாலியா போலீஸ் அதிகாரிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.