வெலிகந்தை மற்றும் ரம்பேவ பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தற்காலிக பதவி நீக்கம்!

247 0

வெலிகந்தை மற்றும் ரம்பேவ ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்களை அந்த பதவிகளில் இருந்து தற்காலிகமாக நீக்குவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மாகாண சபை சட்டம் மற்றும் பிரதேச சபை சட்டத்தின் கட்டளைகளுக்கு அமைவாக வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பொலனறுவை மாவட்டத்தின் வெலிகந்தை பிரதேச சபையின் தவிசாளர் பியதிஸ்ஸ கமகே கவிந்து அபேசூரிய அந்த பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

அவரது செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு பொலனறுவை உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெலிகந்த பிரதேசச சபையின் தவிசாளருக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஓய்வு பெற்ற மேல்நீதிமன்ற நீதிபதி சமன் விக்ரமாராச்சி நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அநுராதப்புரம் ரம்பேவ பிரதேச சபையின் தவிசாளர் அஜித் பிரசன்ன தென்னகோன் அந்த பதவியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

அவரது கடமைகளை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு பிரதேச சபையின் உப தவிசாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.