நாட்டில் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றமைக்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தின் அசமந்தப் போக்கே நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டக் காரணம் என குற்றம் சாட்டினார்.
அத்துடன் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அரசாங்கம் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கவில்லை என்றும் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும்,கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட தரப்பினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும், அரசாங்கத்தின் இயலாமை காரணமாக அதனை கட்டுப்படுத்த முடியாது போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மாகாண சபையை மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வருவதானது முட்டாள்த்தனமான விடம் எனவும் மாகாண சபைக்கு புதிய முகங்களையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.