இந்த ஆண்டு ஜனவரி முதல் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன என தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதற்கான புதிய வரையறைகளை நிர்ணயித்து வர்த்தமானியில் பிரசுரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசியத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் ராஜகிரியவில் உள்ள தலைமையகத்தில் நடைபெற்றது. இதன்பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அடுத்த ஆண்டு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுமாக இருந்தால் அதற்காக நானூறு கோடி ரூபா நிதி ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்வரும் ஜனவரி 11ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு வுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அதே தினத்தில் மாலையில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுடன் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.