உக்ரைனில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் இதுவரையில் 6 பேருக்கு கொரோனா

254 0

உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் மேலும் 03 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய உக்ரைனில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் இதுவரையில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நோயாளிகள் அனைவரும் அவர்கள் தங்கியுள்ள ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தமக்கு பாரிய அச்சுறுத்தலாக இல்லையென்றும்  இதை தாம் எதிர்பார்த்திருந்ததாகவும் அவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் சோதனை முடிவுகள் எதிர்மறையாக இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. எனவே தாம் எல்லாவற்றிக்கும் தயாராகவே இருந்ததாகவும் இதைப் பற்றி மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளளார்.

கடந்த திங்கட்கிழமை சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர், 180 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கான முதல் பயணிகள் விமானம் உக்ரைனில் இருந்து மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

அதன் பின்னர் இரண்டாவது குழுவாக கடந்த 29ஆம் திகதி உக்ரைனில் இருந்து மேலும் 204 சுற்றுலாப்பயணிகள் இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.