துபாயில் நாளை முதல் இனி வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யும் ஸ்கேனர் கருவிகள் மற்றும் வெப்பமானிகள் பயன்படுத்தப்பட மாட்டாது என பொருளாதாரத்துறை தெரிவித்துள்ளது.
துபாயில் கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. குறிப்பாக பொது இடங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு வருகை புரியும் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய ஸ்கேனர் கருவிகள் மற்றும் வெப்ப மானிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது.
வணிக வளாகத்திற்குள் வரிசையாக உள்ளே நுழைபவர்கள் ஒவ்வொருவரது உடல் வெப்பநிலையை கண்காணிக்க நவீன ஸ்கேனர் கருவிகள் மற்றும் ஊழியர்கள் மூலம் பரிசோதனை செய்ய பயன்படுத்தும் வெப்பமானிகள் பயன்படுத்தப்பட்டு வந்தது. உடல் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியசுக்கு மேற்பட்ட நபர்கள் அந்த வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற கட்டுப்பாடு இருந்தது. சில்லறை வர்த்தக கடைகளிலும் இதே பரிசோதனை முறை பின்பற்றப்பட்டு வந்தது.