ஏ-9 வீதியில் பஸ் சாரதியின் சாதுரியத்தால் தவிர்க்கப்பட்ட ஆபத்து!

235 0

வவுனியா ஏ – 9 பிரதான வீதியில் பேயாடிகூழாங்குளம் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் அவ்வீதியால் பயணித்த இ.போ.ச.பஸ் ஆபத்திலிருந்து தப்பியதுடன் குறித்த வீதியூடான போக்குவரத்தும் ஒரு மணி நேரம் தடைப்பட்டது.

இப்பகுதியில் நின்றிருந்த பழைமையான புளிய மரம் நேற்றிரவு 8 மணியளவில் வேரோடு சாய்ந்து மின்கம்பத்தையும் சேதப்படுத்திக் கொண்டு ஏ – 9 பிரதான வீதியின் குறுக்காக விழுந்தது.

அவ்வேளையில் அவ்வீதியால் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி இ.போ.ச. பஸ் ஒன்றும் பயணித்திருந்தது.

எனினும், மரம் முறிந்து விழுவதை அவதானித்த பஸ்ஸின் சாரதி விரைந்து செயற்பட்டு பஸ்ஸை வீதியின் கரையால் செலுத்தியமையால் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

குறித்த விபத்தால் ஏ – 9 வீதியுடனான போக்குவரத்து நேற்றிரவு ஒரு மணி நேரம் தாமதமடைந்திருந்தது.

இதனையறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் கடந்த சில நாள்களாக மழையுடனான காலநிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.