கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக வலுக்கும் போராட்டங்கள்

202 0

கொரோனாவால் மரணிக்கும் சிறுபான்மை முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  (வியாழக்கிழமை) நுவரெலியா மாவட்டத்தின் பல நகரங்களிலும் அம்பாறையிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில் நுவரெலியா, மஸ்கெலியா, நானுஓயா, தலவாக்கலை, கொட்டகலை, ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவ, சாமிமலை போன்ற நகரங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மஸ்கெலியா நகரில் மலையக சிவில் அமைப்பு கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தலைமையில் அமைதி போராட்டம் நடைபெற்றது.

இலங்கை அரசே கொரோனாவால் மரணிக்கும் சிறுபான்மை முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்யும் உரிமையை உறுதிப்படுத்து எனும் தொனிப்பொருளின் கீழ் விழிப்புணர்வு பதாதைகளையும் வெள்ளை கொடிகளையும் ஏந்தி சுமார் ஒரு மணித்தியாலம் அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் போது, கருத்து வெளியிட்ட மலையக சிவில் அமைப்பு கூட்டமைப்பின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம், “இந்த நாட்டில் அரசியலமைப்பின்படி எல்லா மதங்களுக்கும் சகல உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரததில் இந்த கொரோனாவால் மரணிக்கும் நபர்களுடைய சடலங்களை எரிப்பதற்கும் புதைப்பதற்குமான ஆலோசனையை உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களின் மத உரிமைக்கு அப்பால் அவர்களது ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு பதிலாக எரிப்பதற்கான தீர்மானத்தை நடைமுறைப்படுத்தி வரும் இந்த அசாதாரண சூழ்நிலையில் சகல தரப்பும் அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

அரசு காலம் தாழ்த்தாது பாரபட்சமின்றி நடுநிலைமையோடு செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்” என தெரிவிததார்.