கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் 846 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

255 0

கிழக்கு மாகாணத்தில் இன்று (புதன்கிழமை) வரை 846 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ள அவர், “திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் பல இடங்களில் 67 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

திருகோணமலை நகரப் பகுதியில் 43 பேரும் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவில் 7 பேரும் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் 12 பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 14 பேரும் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில் ஒருவரும் சேருவில பிரதேச செயலாளர் பிரிவில் ஒருவரும் கோமறங்கடவெல செயலாளர் பிரிவில் ஒருவருமாக மொத்தம் 67 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக சுகாதார அமைச்சுக்கும் கொரோனா தடுப்பு தேசிய பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டு, திருகோணமலை மாவட்டத்தில் முருகாபுரி, துளசிபுரம், அபேபுர ஆகிய மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனைகள் சுகாதாரப் பிரிவினரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இனங்காணப்பட்ட தொற்றாளர்களை வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மத்தி, அக்கரைப்பற்று பிரதேசங்களில் ஏற்பட்ட கொரோனா தொற்று கொத்தணிகட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் புதுவருட கொண்டாட்டங்களை தவிர்த்து பொது மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.