மன்னாரில் 46 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகள் மீட்பு

198 0

மன்னார்-யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் 91ஆம் கட்டைப் பகுதியில் அடம்பன் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய சுமார் 46 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாப் பொதிகளை நேற்று (20) ஞாயிற்றுக்கிழமை மாலை மீட்டுள்ளனர்.


மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்பில் அடம்பன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்ஷ்மன் ரணவல ஆராச்சி தலைமையிலான பொலிஸ் குழுவினர் மன்னார் யாழ்ப்பாணம் ஏ-32 பிரதான வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20) பயணித்த டொல்பின் ரக வாகனத்தை சோதனைக்கு உட்படுத்தினர்.

இதன் போது சூட்சுமமான முறையில் குறித்த வாகனத்தின் இருக்கைகளினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 14 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதோடு, மன்னார் சாந்திபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய சாரதி கைது செய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் விடத்தல்தீவு மீன் வாடி பகுதியில் 5 கிலோ 95 கிராமும் அதனைத் தொடர்ந்து மோழி என்னும் பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் நடத்திய தேடுதலில் அப்பகுதியிலிருந்து 26 கிலோ 790 கிராம் கேரள கஞ்சா பொதிகளுடன் 48 வயதுடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சுமார் 46 கிலோ 485 கிராம் கேரள கஞ்சாவும் அதனை கொண்டு செல்ல பயன்படுத்திய வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.