ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு – மட்டக்களப்பில் நேர்முகப் பரீட்சை

228 0

வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்துக்கு அமைவாக  574 பணியாளர்களை இணைத்துக்கொள்ளவதற்கான நேர்முகப் பரீட்சை மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) முதல் நடைபெற்று வருகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘சுபிட்சத்தின் நோக்கு’ தேசிய கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக இந்தத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 822 பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கே.கருணாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் கட்டமாக 248 பேர் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்களுக்கான ஆறு மாதகால பயிற்சி நெறிகள் இடம்பெற்று வருகின்றன.

இவர்களுக்கான பயிற்சிகளை பலநோக்கு அபிவிருத்தித் திணைக்களம் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

இந்த நிலையில், இதன் இரண்டாங் கட்டமாக 574 பணியாளர்களை இணைத்துக்கொள்ளவதற்கான நேர்முகப் பரீட்சை மட்டக்களப்பில் இன்று முதல் நடைபெற்று வருகின்றது.

இந்நேர்முகப் பரீட்சையில் தெரிவு செய்யப்படுவோருக்கான ஆறு மாத பயிற்சி நெறி தொடர்ச்சியாக பலநோக்கு அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்படவுள்ளது.

இதுதவிர இவ்வாறு மாத பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்யும் பணியாளர்கள் இம்மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள், உள்ளூராட்சி சபைகள் மற்றும் திணைக்களங்களில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.