யாழில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன: அரச அதிபர் க.மகேசன்

224 0

யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2 ஆயிரத்து 400 குடும்பங்களுக்கு இதுவரை நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

 

தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண உதவி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு அரசினால் வழங்கப்படும் கொரோனா இடர் நிவாரண உதவியின் கீழ் 26 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் 2400 குடும்பங்களுக்கு இன்று வரை வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த நிவாரணப் பணிகள் இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் எனவும் ஒரு குடும்பத்துக்கு பத்தாயிரம் ரூபா பெறுமதியான உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்படுவதாகவும் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிலும் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களின் விபரங்கள் பிரதேச செயலாளர்களால் சேகரிக்கப்பட்டு மாவட்ட செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.

மாவட்ட செயலகத்தின் ஊடாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்ட பின்னர் நிதி மூலம் பெறப்பட்டு தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு நிவாரண உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய நிலையில் ஆயிரத்து 670 குடும்பங்கள் யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்படுத்தலில் இருப்பதாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் மேலும் தெரிவித்துள்ளார்.