ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இந்த வருடமும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாத நிலை – பேராயர்

217 0

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இரண்டாவது வருடமாகவும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாமல் போயுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நத்தார் பண்டிகைக் காலத்தில் பயணங்களை மட்டுப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பேராயர் இல்லத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், நத்தார் பண்டிகையின்போது ஏனைய மக்களை போன்று நாமும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது உகந்ததென நினைப்பதாக கூறியுள்ளார்.

மேல் மாகாணத்தில் கொரோனா நிலைமை பாரதூரமாக உள்ளதால் கொழும்பிற்குள் பிரவேசிப்பதையோ அல்லது கொழும்பில் இருந்து வேறு பகுதிகளுக்கு செல்வதையோ இயன்றளவு குறைத்துக்கொள்ளுமாறு கொழும்பு பேராயர் மக்களிடம் கோரியுள்ளார்.

இம்முறை நத்தாரின்போது உறவினர்களின் வீடுகளுக்கு செல்வதை தவிர்க்காவிட்டால், ஏனைய பகுதிகளிலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கூறியுள்ளார்.

அத்தோடு, வர்த்தக நிலையங்களுக்கு செல்வதை மட்டுப்படுத்துமாறும் ஒன்றுகூடல்கள், விருந்துபசாரங்களை தவிர்க்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, நத்தாரை முன்னிட்டு நடத்த திட்டமிட்டுள்ள களியாட்ட நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், விருந்துபசார நிகழ்வுகளை இரத்து செய்து அந்த நிதியை கொரோனாவினால் நிர்க்கதியாகியுள்ள மக்களுக்கு வழங்குமாறு அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களிடம் பேராயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனிமைப்படுத்தப்படாத பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் 50 இற்கும் மேற்படாத மக்களை ஒன்றுகூடி ஆராதனையை நடத்த அருட்தந்தையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமது குடும்பத்தில் உள்ள பெரியவர்களுடன் சேர்ந்து வீட்டிலேயே நத்தாரை கொண்டாடுமாறும் வீட்டில் நத்தார் மரம் ஒன்றை அலங்கரித்து, நத்தார் குடிலொன்றை அமைத்து வீட்டிலுள்ளவர்களுடன் மாத்திரம் மட்டுப்படுத்துமாறு கொழும்பு பேராயர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இரண்டாவது வருடமாகவும் முறையாக நத்தார் பண்டிகையை கொண்டாட முடியாமல் போயுள்ளதால் இந்த இருண்ட அத்தியாயத்திற்கு முடிவுகட்டும் வகையில் விசாரணைகளை முடிவுறுத்தி மீண்டும் இத்தகைய சம்பவங்கள் நிகழாதிருப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என நினைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குறைந்தது அடுத்த வருடத்திலேனும் நத்தார் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு வழி செய்வார்கள் என தாம் நம்புவதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார்.