தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதல் கட்டாயம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும் – விஜித ஹேரத்

292 0

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி மாதம் முதல் கட்டாயம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இம்முறையும் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றினால் ஜனவரி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் தயாராகவே இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் பெரும் பங்களிப்பை செய்தனர். இன்றும் செய்து வருகின்றனர்.

ஆனால் அவர்களின் வாழ்க்கை நிலைமை மேம்படவில்லை. சுகாதார வசதிகள் இல்லை. தமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குவதற்கு உரிய வகையிலான கல்வி கட்டமைப்பு இல்லை.

மாத சம்பளத்தை பெறுவதற்கான உரிமை இருந்தும் நாட்கூலிகளாகவே நடத்தப்படுகின்றனர். இந்நிலைமை மாறவேண்டும். நாட்டில் ஏனைய பிரஜைகளுக்குள்ள உரிமை அவர்களுக்கும் வழங்கப்படவேண்டும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என அரசாங்கங்கள் உறுதிமொழி வழங்கியிருந்தாலும் இன்னும் அது வழங்கப்படவில்லை. சட்டபூர்வமான பத்திரத்துக்கு பதிலாக மாற்று பத்திரமே வழங்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது 750 ரூபாய் நாட் சம்பளம் வழங்கப்படுகின்றது. அது அடிப்படை சம்பளம் இல்லை.  தற்போது ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனக் கூறப்படுகின்றது. அந்த தொகைகூட போதாது. குறைந்தபட்சம் நாளொன்றுக்கு ஆயிரத்து 281 ரூபாய் வழங்கப்படவேண்டும்.

2021 ஜனவரி முதல் ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்படும் என அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்துள்ளது.

ஆனால் தோட்ட நிறுவனங்கள் இணங்கினால்தான் இந்த சம்பள உயர்வு கிடைக்கும். அவ்வாறு இணங்காவிட்டால் கிடைக்காது.

நிறுவனங்கள் இணங்காவிட்டாலும் அந்த தொகையை அரசாங்கம் வழங்குவதற்கான நிதி வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படவில்லை.

நிறுவனங்கள் சுவீகரிக்கப்படும் எனக் கூறப்பட்டாலும் அதற்கான சட்ட ஏற்பாடுகளும் இடம்பெறவில்லை. எது எப்படியிருந்தாலும் இம்முறை தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்படும் பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அவர்கள் தயாராகவே இருக்கின்றனர்” என அவர் மேலும் தெரிவித்தார்.

0Shares