மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் பிணையில் விடுதலை

421 0

sivageetha-prabakaranமட்டக்களப்பு நகரிலுள்ள கட்டிடமொன்றில் விபச்சார விடுதி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில்  பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  முதல்வர் சிவகீதா பிரபாகரன் உட்பட நான்கு சந்தேக நபர்களுக்கும் நிபந்தனைகளின் பேரில் இன்று நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குறித்த நான்கு சந்தேக நபர்களும், மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிபதி எஸ்.கணேசராஜாஅவர்களை பிணையில் செல்ல அனுமதி வழங்கும் உத்தரவை பிறப்பித்தார்.

குறித்த நால்வரும் தலா 20 ஆயிரம் ரூபா ரொக்கப்பிணையிலும், 2 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையிலும் செல்ல  நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி ஒப்பமிட வேண்டும் என்றும், எதிர்வரும் 5ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகரிலுள்ள சிவகீத்தா பிரபாகரனின் வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் வெளியார் தங்குவதற்கான அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றது.

அந்த கட்டிடத்தில் பாலியல் தொழில் நிமித்தம் சிலர் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அந்த கட்டிடம் கடந்த மாதம் 6ஆம் திகதி பொலிஸாரால் சோதனையிடப்பட்டது.

இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த இரு பெண்கள் கைது செய்யப்பட்டதோடு சில தடயங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து சிவகீதா பிரபாகரன், அவரது வீட்டு உதவியாளர் மற்றும் இரு பெண்களும் சந்தேகத்தின் பேரில் கைதாகி நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.