இனப்பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது-இரா.சம்பந்தன்

330 0

r-sampanthanஇனப்பிரச்சினைக்கு ஒருமித்த நாட்டுக்குள் தீர்வொன்றைக்காண அனைவரும் முன்வரவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் கொழும்பு மாநாகர மேயர் க.கணேசலிங்கத்தின் 10 ஆவது வருட நினைவு தினைத்தை முன்னிட்டு நேற்று கொழும்பு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வாக அமையாது என கருதியிருந்த முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரும் 2001 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரதமாராக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்கவும் அதனை திருத்தியமைக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால் அதனை செய்ய முடியவில்லை.

2006 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச சர்வ கட்சி குழுவை கூட்டி நிபுணர் குழுவையும் நியமித்தார். இதனையடுத்து அந்த நிபுணர் குழுவும் அறிக்கை சமர்ப்பித்தது. ஆனால் இறுதியில் எதுவும் நடக்கவில்லை.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவினால் நிறைவேற்ற முடியாதுபோன அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற கூடிய வகையிலான பெரும்பான்மை பலம் இந்த அரசாங்கத்திற்கு இப்போது இருக்கின்றது.

இந்நிலையில் ஜனாதிபதியும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார் என்பதனை அவரின் கருத்துக்கள் மூலமே புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

ஒரு கருமத்தை நிறைவேற்றியே ஆகவேண்டும் என்ற அவரின் எண்ணத்தின் மீது நாம் நம்பிக்கை வைக்கவேண்டும். நம்பிக்கை வைக்காது கருமம் நிறைவேற்றப்படுமென நம்பிக்கை கொள்ள முடியாது.

இதேவேளை ரணில் விக்ரமசிங்க நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர். நாட்டின் வருமானம் நாட்டின் கடனைச்செலுத்த கூடப்போதுமானது அல்ல. இந்த நாட்டில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படவேண்டும்.

என்றும் குறிப்பிட்டுள்ளார்.