யாழில் கொரோனாவை கட்டுப்படுத்த மக்களின் ஒத்துழைப்பு அவசியம்!

284 0

யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்று அபாயம் அதிகரித்துள்ளதால், தொற்று பரவலை தடுக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும்,

“யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. ஏற்கனவே இரண்டு பேர் தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். மேலும் நெடுங்கேணியில் வீதிபுனரமைப்பு பணிகளில் ஈடுபடும் பொறியியலாளர்கள் இருவருக்கு அங்கேயே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் ஒருவர் வல்வெட்டித்துறை பகுதியையும் இன்னொருவர் சாவகச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள். அவர்கள் யாழுக்கு வந்து சென்றதன் பிரகாரம் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனால் யாழ் மாவட்டத்தில் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது

இந்த நிலையில் நேற்றைய தினம் வரை 241 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேரை தனிமைப்படுத்தி இருக்கின்றோம். படிப்படியாக தனிமைப்படுத்தலில் உள்ளோரின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. தனிமைப்படுத்தப்படுவோர் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்படுகிறார்கள்.

இதனைவிட வெளி மாவட்டங்களில் இருந்து வருவோர் தொடர்பாக உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஏற்கனவே சீதுவ பகுதியிலிருந்து பேருந்தில் பயணம் செய்த 9 பேரும் அதனை விட அதன் சாரதி நடத்துனர் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளார்கள். அவர்களுக்கு விரைவில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

யாழ் மாவட்டத்தைப் பொறுத்த வரைக்கும் தற்பொழுது ஏனைய பகுதிகளில் வேகமாக பரவி வருவதற்கேற்ப நாங்களும் சில முன்னேற்பாடு நடவடிக்கைகளை மிக இறுக்கமாக செயற்படுத்த வேண்டியுள்ளது. எனவே யாழ் மாவட்டத்தை தொற்று ஏற்படாது பாதுகாப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அதேபோல் நாளை வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் வடக்கு மாகாண கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டம் இடம்பெறவுள்ளது. அதேபோல் யாழ் மாவட்ட கொரோனா செயலணி கூட்டம் விரைவில் இடம்பெறவுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் மற்றும் முன்னேற்பாடு செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளோம். எனினும் பொதுமக்கள் இந்த விடயத்தில் மிகவும் விழிப்பாக இருத்தல் வேண்டும்.” – என்றார்.