நியூ டயமன்ட் கப்பலில் மீண்டும் தீ – ஆராயச் சென்றது விசேட குழு

215 0

தீ விபத்துக்குள்ளான நியூ டயமன்ட் கப்பலை ஆராய்வதற்காக வருகைத் தந்திருந்த விசேட குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து நியூ டயமன்ட் கப்பலை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

இதேநேரம், நியூ டயமன்ட் கப்பலில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும் நேற்று இரவு மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

கப்பல் தற்போது காணப்படும் சங்கமன்கண்டியில் இருந்து 30 கடல்மைல் தொலைவில் வீசும் பலத்த காற்று காரணமாகவும் கப்பலின் உள்பகுதியில் காணப்படும் அதிக உஷ்னம் காரணமாகவும் இவ்வாறு மீண்டும் தீ பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில், இரசாயன பொருட்களையும் நீரையும் பயன்படுத்தி வெப்பத்தை தணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு கிழக்கே சங்கமன்கண்டி இறங்குதுறையில் 38 கடல் மைல்கள் தொலைவில் எம்.டி.நியூ டயமன் என்ற எண்ணெய் தாங்கிக் கப்பல் கடந்த வியாழக்கிழமை காலை 8 மணியளவில் தீ விபத்துக்கு உள்ளாகியது.

கப்பலின் பிரதான இயந்திர அறையில் கொதிகலன் வெடித்ததைத் தொடர்ந்து தீப் பரவல் ஏற்பட்ட நிலையில் இரண்டு நாட்களாக தீயைக் கட்டுப்படுத்த தீவிர முயற்சி எடுக்கப்பட்டது.

இதன்பலனாக, இலங்கைக் கடற்படை, விமானப்படை, துறைமுக அதிகாரசபை மற்றும் இந்திய கடற்படை, இந்திய கடலோரப் பாதுகாப்புப்படை ஆகியன இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.