சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 12சந்தேகநபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

219 0

தொடர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 12சந்தேகநபர்களை, மீண்டும் செப்டெம்பர் 21ஆம் ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) அம்பாறை மாவட்டம் கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் இரு வேறு சந்தர்ப்பங்களில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்டபோது காணொளி (வீடியோ கன்பிரன்ஸ்) ஊடாக சந்தேகநபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் குறித்த 12 சந்தேகநபர்களையும் மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த விசாரணையின்போது, மேலதிக அறிக்கைகள் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டு மீண்டும் சந்தேகநபர்கள் விசாரணைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மேலும் மட்டக்களப்பு- காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வைத்து, கடந்த வருடம் மேற்குறித்த 12 சந்தேகநபர்களும் கைதாகி இருந்தனர்.

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவரான சஹ்ரான் ஹாசீம் தலைமையில் பல்வேறு இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு, அதனை தொடர்ந்து ஏப்ரல் 26 ஆம் திகதி, அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் குறித்த அமைப்புடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நாட்டின் நாலாபுறமும் பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1Share