கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட அரியவகை வெள்ளை நாவல் இனம்

222 0

கிளிநொச்சியில் அரியவகை வெள்ளை நாவல் இனம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

கண்டாவளை- உழவனூர் கிராமத்தில், தனியார் ஒருவரின் காணியில் அரியவகை வெள்ளை இன நாவல் இனம் காணப்பட்டுள்ளது.

உழவனூர் கிராமத்தில் வசிக்கும் வல்லிபுரம் இராஜேந்திரம் என்பவரின் காணியில் குறித்த வெள்ளை இன நாவல் மரம் இனம் காணப்பட்டுள்ளது.

குறித்த நாவல் மரத்தின் பழங்கள் வித்தியாசமாக இருப்பதனை அவதானித்த அவர், அதனை பிடுங்கி உண்டபோது அவை நன்கு பழுத்த நாவல் பழங்களாக காணப்பட்டுள்ளன.

நாவல் மரம் அதன் தோற்றம் என்பன வழமையான நாவல் மரம் போன்றே காணப்படுகின்றது.  காய்களும் வழமையான நாவல் காய்கள் போன்றே உள்ளன. ஆனால் பழம் மாத்திரம் வெள்ளை நிறமாக  நெல்லிக்காய் நிறத்தில் காணப்படுகின்றன. மேலும், பழத்தின் சுவையும் வழமையான பழத்திலிருந்து வேறுபடுகிறது.

இந்த நாவல் இனம் தொடர்பாக கிளிநொச்சி இரணைமடு விவசாய ஆராய்ச்சி நிலைய பணிப்பாளர் கலாநிதி அரசகேசரி  தெரிவித்துள்ளதாவது, “குறித்த நாவல் இனம் ஏற்கனவே பூநகரி பகுதியில் 2014ஆம் ஆண்டு  எம்மால் அடையாளம் காணப்பட்டது.

அவ்வினம் தொடர்பில் விவசாய ஆராய்ச்சி இடம்பெற்ற வருகின்றது. குறித்த இனம் ஓர் புதிய வகை இனமல்ல.  இது போன்று பல்வேறு இனங்கள் காணப்படும் நிலையில் நாவல் இனத்தில் இதுவும் ஓர் தனித்துவமான இனம்” என குறிப்பிட்டுள்ளார்.