தியாக தீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவுநாள் நடைபவனிக்கு அழைப்பு!

183 0

தியாக தீபம் திலீபனின் 33ம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு திலீபனின் ஐந்து அம்சக கோரிக்கைகளை முன்வைத்து முள்ளிவாய்க்காலில் இருந்து நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவு தூபி வரை நடைபயணம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணி தலைவர் கி.கிருஸ்னமேனன் தெரிவிக்கையில்,

“குறித்த நடைபயணம் தமிழர் தாயக பொது அமைப்புகள் மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஏற்பாட்டில் இடம்பெற இருக்கின்றது.

எதிர்வரும் 21ம் திகதி முல்லைத்தீவு – முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இருந்து ஆரம்பமாகும் குறித்த நடைபவணி 26ம் திகதி நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தை சென்றடைய இருக்கின்றது.” – என்றார்

இதேவேளை இந்த நடைபவணியில் தாங்களும் கலந்துகொள்ள போவதாக இலங்கை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட வாலிபர் முன்னணி தலைவர் க.பிருந்தாபன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணியின் இளைஞர் அணி தலைவர் கி.கிருஸ்னமேனன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊடக சந்திப்பில் மேலும் பேசிய கிருஸ்னமேனன்,

“இளைஞர்களுடைய செயற்பாடுகளை பார்த்து தமிழ் கட்சிகளின் தலைவர்களும் தங்களுக்குள் ஒன்றுபட வேண்டும். இளைஞர்களான எங்களுக்குள் எந்தவிதமான பிரிவினைகளும் முரண்பாடுகளும் இல்லை, அவ்வாறு இருந்தாலும் நாங்கள் தேசியத்துக்கான ஒரு விடையம் வரும் போது ஒற்றுமையான செயல்பாடுகளையே மேற்கொண்டு வந்துள்ளோம்.

எதிர்காலத்தில் ஒரு ஒற்றுமையான பயணத்தினை மேற்கொள்ளுவதற்கு இது ஒரு ஆரம்ப புள்ளியாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.