மணல் கடத்தல் வழக்கில் இனி முன்ஜாமீன் கிடையாது – ஐகோர்ட்டு நீதிபதி திட்டவட்டம்

255 0

மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமீன் கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி திட்டவட்டமாக கூறினார்.

சென்னை, நீலகிரி மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஏராளமான மணல் கடத்தல் வழக்குகள் தினமும் பதிவாகின்றன. இந்த வழக்குகளில் சிக்குபவர்களுக்கு முன்ஜாமீன், ஜாமீன் வழங்கும்போது, குறிப்பிட்ட தொகையை மாவட்ட நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை நீதிமன்றங்கள் பிறப்பித்து வந்தன. இந்த நிபந்தனை தொகையை பெற்று மாவட்டத்தில் உள்ள கனிம வள மேம்பாட்டுக்கு செலவு செய்ய மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டது.

இவ்வாறு தொகை விதிப்பதால், மணல் கடத்தல் குறையும் என்ற எண்ணத்தில் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தன. ஆனால் மணல் கடத்தல் எண்ணிக்கை குறையவே இல்லை. மாறாக அதிகரித்தது. அதேபோல, ஜாமீன், முன்ஜாமீன் நிபந்தனை மூலம் மாவட்ட நிர்வாகத்துக்கு கிடைக்கும் தொகையும் பெரும் தொகையாக அதிகரித்தது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்கள் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 15 மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு எளிதாக முன்ஜாமீன் கிடைக்கிறது. அதனால் மணல் கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் கனிம வளமே எதிர்காலத்தில் இல்லாமல் போய் விடும். குடிதண்ணீருக்கு அடுத்த தலைமுறையினர் திண்டாட வேண்டியது வரும்.

முன்ஜாமீன் நிபந்தனையாக ரூ.25 ஆயிரம் விதித்தால், அதை செலுத்த இந்த கும்பல் தயங்குவதில்லை. தாராளமாக செலுத்துகின்றனர். சிறைக்குள் போகாமல் முன்ஜாமீன் கிடைப்பதால் பலர் தைரியமாக கடத்தலில் ஈடுபடுகின்றனர். எனவே இனி மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு முன்ஜாமீன் கிடையாது.

அவர்கள் சிறைக்குள் சில காலம் இருந்தால் தான் கடத்தலில் ஈடுபடுவோருக்கு பயம் வரும். கடத்தல் குறையும். இயற்கை பாதுகாக்கப்படும்” என்று கருத்து தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ், “ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கவில்லை என்றால் கீழ் கோர்ட்டுகளான மாவட்ட செசன்சு கோர்ட்டுகளில் மணல் கடத்தல் கும்பல் முன்ஜாமீன் பெற்று விடும். அதனால் மணல் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று விரிவான தீர்ப்பை வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து நீதிபதி, “மணல் கடத்தல் வழக்கில் சிக்குவோருக்கு முன்ஜாமீன் கிடையாது” என்று திட்டவட்டமாக கூறினார். பின்னர், ‘மணல் கடத்தல் வழக்கில் சிக்கி முன்ஜாமீன் கேட்டு தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். அன்று இதுகுறித்து விரிவான தீர்ப்பு வழங்கப்படும்’ என்று நீதிபதி உத்தரவிட்டார்.