தென்கொரியா பெண் அதிபர் பதவி விலகக்கோரி 13 லட்சம் மக்கள் பேரணி – ஆர்ப்பாட்டம்

316 0

201611270941576690_13-million-rally-to-demand-s-korea-president-ouster_secvpfஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் நெருங்கிய தோழியுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் தென்கொரியா நாட்டின் பெண் அதிபர் பார்க் கியூன் ஹே உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 லட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும், ஆர்ப்பாட்டமும் சியோல் நகரில் நடைபெற்றது.

தென்கொரியாவில் அதிபர் பார்க் கியுன் ஹே தலைமையிலான அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பெருகிவருகிறது. அதிபரின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிகமுக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

மேலும், அதிபருடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.

இதையடுத்து, கடந்த முதல் தேதி சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றும், வழக்குகள் பதிவு செய்யப்பட்டும் வருகிறது.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி இருக்கும் சோய் சூன் சில்-லுடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ‘சாம்சங்’ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்களில் அந்நாட்டு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

தனது தோழியின் செயலுக்கு வருத்தம் தெரிவித்த அதிபர் பார்க் கியுன் ஹே, இவ்விவகாரத்தில் மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டார். இதற்கிடையில், அதிபர் பார்க் கியூன் ஹே, அரசுப் பணத்தை செலவிட்டு ஆண்களுக்கான செக்ஸ் எழுச்சியை தூண்டும் வயாகரா மாத்திரைகளை அதிகளவில் வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இதுபற்றி அதிபர் மாளிகை அளித்த விளக்கத்தில் ஆப்பிரிக்கா உள்ளிட்ட கடல்மட்டத்துக்கு மேலே அமைந்துள்ள நாடுகளுக்கு அதிபர் செல்லும்போது அவருடன் செல்லும் அதிகாரிகளுக்கு ஏற்படும் படபடப்பை போக்க இந்த மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த விளக்கத்தை எதிக்கட்சியினரும் பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை.

இந்நிலையில், அதிபர் பார்க் கியுன் ஹே-வுக்கு மக்களிடையே இருக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு தொடர்பாக இந்தவாரம் வெளியான கருத்துக்கணிப்பில் அவர் மேலும் 4 சதவீதம் பின்தங்கியுள்ளார். அவரது செயல்பாட்டை எதிர்த்து கருத்து தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை 93 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படும் தென்கொரியா அதிபரின் செல்வாக்கு இதற்கு முன்னர் எப்போதும் இல்லாதவகையில் தற்போது அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளதாக அந்நாட்டின் பிரபல ஊடகங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன.

இந்நிலையில், அதிபர் பார்க் கியூன் ஹே உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் சுமார் 13 லட்சம் மக்கள் பங்கேற்ற பேரணியும் ஆர்ப்பாட்டமும் சியோல் நகரில் நேற்று நடைபெற்றது.மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி ஆட்டம், பாட்டத்துடன் பேரணியில் பங்கேற்ற மக்கள் பார்க் கியூன் ஹே கைது செய்யப்பட வேண்டும், அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று முழக்கமிட்டபடி அதிபர் மாளிகையை நோக்கி அணிவகுத்து சென்றனர்.

பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவியர், புத்தமத துறவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற இந்த பேரணி இரவு 8 மணியளவில் அதிபர் மாளிகை அமைந்திருக்கும் பகுதியை அடைந்தது.அப்போது, பேரணியாக வந்த அனைவரும் தங்களது மெழுகுவர்த்திகளை அணைத்தனர். ஒருநிமிடத்துக்கு பின்னர், மீண்டும் மெழுகுவர்த்திகளை ஏற்றி, ‘அதிபர் பதவியில் இருந்து பார்க் கியூன் ஹே இறங்கும்வரை எங்கள் போராட்டம் ஓயாது’ என்ற முழக்கங்களுடன் அவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.