வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு அறிக்கை ஊடாக எச்சரிக்கை

313 0

அம்பாறை திருக்கோவில் பகுதியிலுள்ள அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க காரியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகை இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு, அதில் எச்சரிக்கை அறிக்கையொன்று ஒட்டப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (புதன்கிழமை) இரவு, இடம்பெற்றுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி செல்வராணி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தம்பிலுவில் மத்திய சந்தை கட்டடத்தில் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க காரியாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த பெயர் பதாதையை, இனந்தெரியாத சந்தேகநபர்கள், நேற்று இரவு அடித்து உடைத்துள்ளதுடன், அதில் ஒரு துண்டுபிரசுரத்தை ஒட்டிவைத்துவிட்டு சென்றுள்ளனர்

இதேபோன்றுதான் உனக்கும் செய்வோம் என அத்துண்டு பிரசுரத்தில் எழுதப்பட்டு உள்ளது. இது ஒரு அடாவடித்தனம்.

இன்று தொலைத்துவிட்டு தேடுவது எங்களது உறவுகளை, நாங்கள் எவருக்கும் எதுவும் செய்யவில்லை யாருடனும் எதுவித பிரச்சனைக்கும் செல்லவில்லை

நாங்கள் எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை நிலை தெரியவேண்டும் எனதான் இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தை வைத்து போராடி வருகின்றோம்

இதனை செய்தவர்கள் யார் என எங்களுக்கு தெரியாது. எனினும் அவர்களை விரைவில் கண்டுபிடிப்போம். இதேவேளை இது தொடர்பாக ஐ.நா.சபை, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், மனித உரிமை ஆணையகம், திருக்கோவில் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவித்திருக்கின்றோம். இந்த செயற்பாட்டையிட்டு நாங்கள் கவலையடைகின்றோம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இம்மாதம் 30ஆம் திகதி, சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் போராட்டமொன்றை நடத்த இருக்கும் நிலையில் இந்த  செயற்பாட்டை ஏன் செய்தார்கள் என தெரியவில்லை .

இதனை யார் செய்தாலும் எங்களது காணாமல் ஆக்கப்பட் உறவுகளின் உண்மை நிலை தெரியும் வரை போராட்டத்தை தொடருவோம்.

இப்போது எங்களது உயிருக்கு யார் உத்தரவாதம். குறித்த செயற்பாடு எங்களுக்கு அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.