லிபியாவில் அகதிகள் வந்த படகு விபத்து: 45 பேர் பலி

302 0

லிபியாவின் கடல் பகுதிகள் ஆப்பிரிக்காவிலிருந்து வந்த அகதிகள் படகு விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலியாகி உள்ளனர்.

இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “ சினகல், மாலி, சாட், கானா ஆகிய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வந்த அகதிகள் படகு லிபிய கடல் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து அங்கிருந்த உள்ளூர் மீனவர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 45 பேர் பலியாகினர். 37 பேர் காப்பாற்றப்பட்டனர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கானா, மாலி போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் அங்கு நிலவும் வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக வாழ்வாதாரத்துக்காக மக்கள் வேறு நாட்டுக்கு உயிரை பணயம் வைத்து கடலில் பயணிக்கின்றனர். அவ்வாறு பயணிக்கையில் இம்மாதிரியான விபத்துகளில் சிக்கி உயிரை இழப்பது தொடர் கதையாகி வருகிறது.

மேலும், வட ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். உயிரை பாதுகாத்துக்கொள்ளவும், வறுமையில் இருந்து விடுபடும் பலர் புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

இதுபோலவே உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் ஏராளமானோர் அகதிகள் மத்திய தரைக்கடல் வழியாக படகுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். அவர்கள் செல்லும் படகுகள் அவ்வப்போது நடுக்கடலில் விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.