அமெரிக்க அதிபர் தேர்தல்- ஜோ பிடனை வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஜனநாயக கட்சி

257 0

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் நவம்பர் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், 2-வது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடன் அதிபர் பதவிக்கும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளரை அதிகாரபூர்வமாக தேர்வு செய்யும் கட்சி மாநாடு, ஆன்லைன் மூலம் நடைபெற்றது. இதில் ஜோ பிடன் அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த மாநாட்டில் பேசிய அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி, மிச்சேல் ஒபாமா, டிரம்பை மிகக் கடுமையாக விமர்சித்தார். அவர் ஒரு  மிகத் தவறான அதிபர் என்றார். தலைமை பண்பு, நிலையான போக்குகள் அற்றவர் என்றும், குழப்பங்களை விளைப்பவர் என்றும் சாடினார்.
மாநாட்டின் முடிவில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பிடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். ‘ஜனநாயக கட்சியின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வது வாழ்க்கையில் தனக்கு கிடைத்த கவுரவம்’ என ஜோ பிடன் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் டிரம்ப் உருவாக்கிய குழப்பங்களை சரிசெய்ய ஜோ பிடனுக்கு அனுபவமும் ஆற்றலும் இருப்பதாக ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.