மாங்கேணி விபத்தில் ஒருவர் பலி! – ஒருவர் படுகாயம்!

305 0

மட்டக்களப்பு – திருகோணமலை வீதி மாங்கேணி பிரதேசத்தில் நேற்று (17) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மாங்கேணியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாங்கேணி, பிரப்பையடிமடு பிரதேசத்தில் இருந்து மாங்கேணி கடற்கரையில் மீன் பிடிப்பதற்கு துவிச்சக்கர வண்டியில் சகோதர்கள் இருவரும் பயணித்துக் கொண்டிருந்த வேலையில் மாங்கேணி புல்லாவி பிரதேசத்தில் வைத்து திருகோணமலையில் இருந்து வந்த காரில் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றது என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக வாகரை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் மாங்கேணி பிரப்பையடிமடுவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சபாபதி சிவனேஸ்வரன் (வயது-28) என்பவர் உயிர் இழந்துள்ளதுடன், அவருடன் பயணித்த சகோதரரான சபாபதி ரவியேந்திரன் (வயது-22) என்பவர் பலத்த காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காரின சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக வாகரை பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று மூன்று இடங்களில் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், இதில் இருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.