புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் நிறைவு

247 0

சிறிலங்கா பொதுத் தேர்தலில் இம்முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தமது தகவல்களை வழங்கும் கால அவகாசம் இன்றுடன் (சனிக்கிழமை)  நிறைவடைகிறது.

இந்த நிலையில், இதுவரை தகவல்களை வழங்காத நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினத்துக்குள் விண்ணப்பப் படிவத்தை பூரணப்படுத்தி தகவல்களை வழங்குமாறும் செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி இடம்பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியேற்கும் நிகழ்வில் இந்த தகவல்கள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள 175 உறுப்பினர்கள் இதுவரை அவர்களின் தகவல்களை ஒன்லைன் முறைமையூடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒன்லைன் விண்ணப்பப் படிவம் மூலம் உறுப்பினர்களின் தகவல்களை பெறுவது வெற்றிகரமாக அமைந்திருப்பதாகப் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க தெரிவித்துள்ளார்.