ஸ்ரீலங்கா ரீதியில் சுமூகமாக இடம்பெற்று வரும் வாக்கு எண்ணும் நடவடிக்கை

266 0

ஸ்ரீலங்கா ரீதியில் உள்ள அனைத்து வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் சுமூகமாக இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதற்கமைய, யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள மத்திய நிலையத்தில் இடம்பெற்று வருகிறது.

ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிகளின் தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியதோடு, அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்குப் பின்னர் ஏனைய வாக்குகள் எண்ணும் பணியும் ஆரம்பாகி இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் 73 சாதாரண வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் 16 தபால் மூல வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் வாக்குகள் எண்ணும் பணி இடம்பெற்று வருகிறது.

யாழ்ப்பாணத்தில் அதிகாரபூர்வமான முதலாவது முடிவு முற்பகல் 11.30 மணிக்கு வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.