மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரதிநிதிகள் மாத்திரமே வெற்றியடைய வேண்டும்- அநுர

313 0

மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரதிநிதிகள் மாத்திரமே இம்முறை  நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பஞ்சிகாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றிய அநுர, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,  “குடும்ப ஆட்சியை மக்கள் தமது வாக்குகளால் தோல்வியடையச் செய்து, மக்களுக்காக குரல் கொடுக்கும் பிரதிநிதிகள் மாத்திரமே இம்முறை  நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும்.

மேலும் கடந்த தேர்தலை விட இம்முறை எம்மால் அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியதோடு மாத்திரமின்றி, அரசாங்கத்தின் தேவைக்கேற்ப செயற்படாது தமக்குரிய அதிகாரங்களை உரிய முறையில் பயன்படுத்தி நீதியானதும் அமைதியானதுமான தேர்தலை நடத்தியதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு நன்றி தெரிவிக்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.