புனர்வாழ்வளிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம்!

256 0

npc-02-11-15-1சிறீலங்கா அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கை பிரேரணை நேற்றைய தினம் (வியாழக்கிழமை) வடக்கு மாகாண சபையினால் ஏனமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் குறித்த பிரரணையை சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். அத்துடன் சிறீலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட 35பேர் தற்போது பட்டதாரிகளாக வெளியேறியுள்ளனர்.

இவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைத்தபோதும் ஒருசில காரணங்களால் பல்கலைக்கழக கல்வியைத் தொடரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

தற்போது புனர்வாழ்வின் பின்னர் தமது பட்டப்படிப்பை முடித்து வெளியேறியுள்ளனர். இதற்கமைய யாழ்ப்பாணத்தில் 11பேரும், கிளிநொச்சியில் 12பேரும், முல்லைத்தீவில் 7பேரும், வவுனியாவில் 4பேரும், மன்னாரில் ஒருவருமென 35 பட்டதாரிகள் வடக்கு மாகாணத்தில் உள்ளனர். இவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனம் வழங்கப்படவேண்டுமென சுகாதார அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க அப்பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.