தமிழ் மக்களின் இன்னல்கள் தொடர்பாக பெரும்பான்மையினருக்கு புரிய வைப்பேன்- சுமணரத்தன தேரர்

261 0

தமிழ் மக்களின் இன்னல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்திலுள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எடுத்துரைப்பேன் என மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாராதிபதியும் சுயேச்சைக் குழு 22 வேட்பாளருமான அம்பிட்டிய சுமணரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் அம்மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சுமணரத்தன தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தொல்பொருள் செயலணி தொடர்பாக மிகவும்  மனவேதனையடைகின்றேன்.

மேலும் நாட்டை ஆட்சி செய்கின்றவர்களும் செய்ய இருப்பவர்களும் நான்  நாடாளுமன்றம் செல்வதில்  அச்சத்தில் இருக்கின்றனர்.

இதற்கு காரணம்  தமிழ் மக்களுக்குரிய பிரச்சினைகளை அவர்களின்  மொழியில் நான் எடுத்துக்  கூறி, தீர்வை பெற்றுக்கொடுக்கும்போது இதுவரை காலமும் நாடாளுமன்றம் சென்றவர்கள் அதனை செய்யாதமையிட்டு வெட்கப்பட வேண்டிய நிலைமை ஏற்படும்.

அரசியலில் மட்டுமல்ல நிர்வாகத்துறையில் இருப்பவர்களும் இதுவரை காலமும் மக்களுக்காக எதனை செய்தார்கள் என்பது குறித்து தமிழ் மக்கள் உணர்ந்து  சிந்தித்து பார்க்க வேண்டும்.

இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையானுக்கு எதிராக சாட்டப்பட்ட குற்றங்களும் அதற்கான வழக்குகளும்  உள்ளமையால் அவர் அமைச்சர் பதவியில் அமர முடியாது.

இந்நிலையில் நாடாளுமன்றம் சென்று என்ன செய்யப்போகிறார்” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.