மொகமட் இங்கு பொறுப்பை ஏற்காமல் திரும்பிச்சென்றுவிட்டாரா?

362 0

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட விசேட அதிகாரியான மொகமட், முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் எழுப்பிய சந்தேகம் காரணமாக இங்கு பொறுப்பை ஏற்காமல் திரும்பிச்சென்றுவிட்டதாகத் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உயர் பதவிகளில் இருக்கும் இரு முக்கிய அதிகாரிகள் ஓர் அரசியல் கட்சியின் வேட்பாளருக்குச் சார்பாக செயலகத்தின் பல தகவல்களையும் வழங்குவதோடு அக் கட்சியினால் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் தொடர்பிலும் கண்டுகொள்வது கிடையாது என வேறு சில அரசியல் கட்சிகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு முறைப்பாடு கொண்டு சென்றன

இதனை ஆராய்ந்த ஆணைக்குழு, முன்னாள் உதவித் தேர்தல் ஆணையாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையில், மீளப்பணிபுரியும் அதிகாரியான மொகமட்டை யாழ்ப்பாணத்ற்கென விசேடமாக நியமித்து யாழ்ப்பாணம் அனுப்பியது.

இந்த நிலையில் விசேடமாக நியமிக்கப்பட்ட அந்த அதிகாரி தொடர்பில் விக்கினேஸ்வரன் பகிரங்கமாக சந்தேகம் எழுப்பியமையோடு அது பற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. இவற்றின் காரணமாக குறித்த அதிகாரி நேற்றைய தினமே மீண்டும் கொழும்பு திரும்பியுள்ளார் என யாழ். செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.