ஹட்டன் போடைஸ் பாலம் சேதம்-புனரமைத்துத் தருமாறுகோரி ஆர்ப்பாட்டம்(காணொளி)

325 0

podais-protestedநுவரெலியா ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம வரை செல்லும் பிரதான வீதியிலுள்ள போடைஸ் பாலத்தினைப் புனரமைத்துத் தருமாறு இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹட்டனிலிருந்து போடைஸ் வழியாக டயகம வரையிலான செல்லும் பிரதான வீதியிலுள்ள போடைஸ் பாலம் கடந்த 2 தினங்களுக்கு முன்பாக சேதமடைந்துள்ள நிலையில், குறித்த பாலத்தினை உடனடியாக புனரமைத்து தருமாறு, உரிய தரப்பினரிடம் வலியுறுத்தி தனியார் பஸ் சேவையாளர்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவையாளர்கள் உட்பட அப்பிரதேச மக்கள் பலரும் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இன்று காலை இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டமானது போடைஸ் பகுதியில் இடம்பெற்றது.

இதில் 50இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் ஸ்தலத்திற்கு விரைந்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததோடு, மத்திய மாகாண பெருந்தெருக்கள் அமைச்சருக்கு தொலைபேசியின் ஊடாக தொடர்பை ஏற்படுத்தி இப்பாலத்தினை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டதற்கமைய, அமைச்சர் பாலத்தினை புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார். அதனையடுத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

இதேவேளை, போடைஸ் பாலம் உடைந்துள்ளதனால், அவ்வீதியினூடாகசிறிய ரக வாகனங்கள் மட்டுமே பயணிக்க கூடியதாகவுள்ளதாகவும், பாரவூர்த்திகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.