சிறிலங்காவில் ராஜித தாக்கல் செய்த திருத்த மனு நிராகரிப்பு

263 0

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த திருத்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மனுவை ராஜித சேனாரத்னவின் வழக்கறிஞர் மீள பெற்றுக் கொண்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அச்சல வெங்கலபுலி மற்றும் பிரியந்த பெர்னான்டோ ஆகிய நீதிபதிகள் குழுவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டமைக்காக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணையை கொழும்பு மேல் நீதிமன்றம் இரத்து செய்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி ராஜித சேனாரத்னவினால் குறித்த திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.