சிறிலங்காவில் மஸ்கெலிய லயன் குடியிருப்பில் தீ விபத்து

231 0

சிறிலங்காவில் மஸ்கெலியா- லெங்கா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஒரு வீடு முழுமையாகவும் மற்றுமொரு வீடு பகுதியளவும் சேதமடைந்துள்ளன.

சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், வீட்டில் இருந்தவர்கள் வெளியில் சென்றிருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மின் ஒழுக்கு காரணமாகவே தீப்பரவலம் ஏற்பட்டிருக்கலாம் என  பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக கேள்வியுற்ற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, தீ விபத்தால் பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்களையும் பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ததுடன், அவர்களுக்கு 14 நாட்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.

மேலும் குறித்த லயன் குடியிருப்பு தொகுதியில் மின்ஒழுக்கு இருந்தால் விரைவில் அதனை சீர்செய்யுமாறு தோட்ட முகாமைத்துவ அதிகாரிகளிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.