சிறிலங்காவில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுஜன பெரமுன நாடாளுமன்றில் கால்பதிக்கும்- சி.பி.ரத்நாயக்க

246 0

சிறிலங்காவில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிச்சயம் பெறும் என நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சி.பி. ரத்நாயக்க தெரிவித்தார்.

பூண்டுலோயா, கலப்பிட்டிய பகுதியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெறவேண்டும் என்பதே ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. அதேபோல் தேர்தல் களமும் சூடுபிடித்துள்ள நிலையில் தேர்தல் சட்டமும் கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்தே கூடுதலான உறுப்பினர்கள் இம்முறை நாடாளுமன்றம் செல்வார்கள். அதாவது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாம் நிச்சயம் பெறுவோம்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் சிறப்பான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளது. தற்போது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்படுகின்றது. எனவே, யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்பதை மக்கள் தீர்மானித்துவிட்டனர்.

அதேவேளை, எம்.சி.சி. விவகாரத்தை நல்லாட்சி எனக் கூறிக்கொண்ட அரசாங்கமே கையாண்டது. அதன்பின்புலம் தொடர்பாக எமக்குத் தெரியாது. ஆனால், நாட்டு வளங்களை விற்பனை செய்வதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்” என்றார்.