மட்டக்களப்பில் வெள்ளப் பாதிப்பைத் தவிர்க்கும் விசேட திட்டம்!

262 0

மழைப் பருவ காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளை வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கான  திட்டமொன்று அமுலாக்கப்படவிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முந்தானை ஆற்றினையும் மட்டக்களப்பு வாவிகள் சார்ந்த பகுதிகளையும் இணைத்து இந்த வெள்ளத் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் அமுலாக்கம் பற்றிய சாத்தியவள அறிக்கை தயாரிக்கும் பிரான்ஸ் நாட்டு நிறுவனத்தின் அபிவிருத்தி குழுவின் பிரதிநிதி டேவிட் சாஜன் பேராசிரியர் எஸ். நந்த கோபாலன் அடங்லான குழுவினர்   மாவட்டச் செயலாளரை மாவட்ட செயலகத்தில் சந்தித்து சாத்தியவள அறிக்கை தயாரிப்பது பற்றி விசேட கலந்துரையாடலை நடாத்தினர்.

இதில் மட்டக்களப்பு எருமைத்தீவு அடங்கலான மட்டக்களப்பு வாவியை ஆழமாக்கும் திட்டமும் உள்ளடக்கப்படவிருப்பதாகவும் அத்துடன் வெள்ள இடர்களின்போது மிக மோசமாக பாதிக்கப்படும் கிரான் பாலத்தை புனரமைப்பு செய்வதும் இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.

கிரான் பாலம் வெள்ளத்தால் மூழ்கும்போது அப்பிரதேசத்தை அண்டிய பல கிராமங்கள் நகரப் பகுதிகளிலிருந்து துண்டிக்கப்படுவதனால் இத்திட்டத்தின்பால் கரிசனை எடுத்திருப்பதாக கலாமதி மேலும் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கான சாத்தியவளை அறிக்கை பூர்த்தி செய்யப்பட்டு அடுத்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்படவிருப்பதாகவும் இத்திட்டம் பூர்த்தியானதும்  மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பினால் கிராமங்கள் தனிமைப்படுத்தப்படுதல் போன்ற இக்கட்டான நிலைமையை தவிர்க்க வழி ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி மத்திய நீர்;ப்பாசன திணைக்களத்தின் பிரதம எந்திரி ரஜனி ரவீந்திரன் திட்ட எந்திரி ஜி. தனஞ்ஜெயன் உறுகாமம் பிரிவுக்கான எந்திரி எஸ். நிரோசன் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளர் எஸ். அமிர்தலிங்கம் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.