சிறிலங்காவில் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு பொய் பிரசாரமாக இருந்தால் சர்வதேச கிரிக்கெட் நிறுவனத்தின் சட்டத்தின் பிரகாரம் இரண்டு வருட சிறைத்தண்டனையை முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகேவுக்கு வழங்க முடியுமென விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி பண்டுக கீர்த்தினந்த தெரிவித்துள்ளார்.
கடந்த 2011 உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியின்போது ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருக்கும் கருத்து கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவரின் சர்ச்சையான கருத்துக்கு, பலரும் தங்களது கருத்துக்களை வெவ்வேறு விதமாக தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னாள் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி பண்டுக கீர்த்தினந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “விளையாட்டுக்களில் பிழை, மோசடிகளை தடுக்கும் வகையில் கடந்த 2019 அங்கீகரிக்கப்பட்ட சட்டத்தின் கீழ், தற்போது தெரிவிக்கப்படும் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றிருந்தால் அவர்களுக்கு எதிராக குறித்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது.
ஏனெனில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு குறித்த சட்டம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் இடம்பெற்ற விடயமொன்றாகும்.
எனினும் சர்வதேச கிரிக்கெட் நிறுவனத்தின் ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்கமுடியும். ஆனால் இதில் பிரதானமாக இடம்பெறவேண்டி இருப்பது இந்த கூற்றின் உண்மைத்தன்மை தொடர்பாக தேடிப்பார்ப்பதாகும்.
ஒருவேளை,மஹிந்தானந்த அளுத்கமகேயின் கூற்று பொய் குற்றச்சாட்டாக இருந்தால், இந்த சட்டத்தின் பிரகாரம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும்.
அதாவது, அவர் பொய் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்தார் என்ற குற்றத்துக்காக அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணையில் குற்றம் உறுதியாகும் பட்சத்தில் ஒரு இலட்சம் ரூபாய் வரை தண்டப்பணம் அல்லது இரண்டு வருட சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்படலாம்” என குறிப்பிட்டுள்ளார்.