யாழ். பருத்துறை வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் சுகாதார நடைமுறைகளை மீறி அதிக பொதுமக்கள் கூடிய நிலையில், ஆலயத்தை முற்றுகையிட்ட பருத்துறை சுகாதாரசேவைகள் வைத்திய அதிகாரி பணிமனையை சேர்ந்த அதிகாரிகள் குழாம் அடுத்த 14 நாள்களுக்கு கோவிலுக்குள் வெளியார் நுழையத் தடைவிதித்துள்ளனர்.
சாமி காவிய ஒருவருக்கு காய்ச்சல் இருந்த நிலையில் அவருடன் சேர்ந்த சாமி காவிய 3 பேரை தனிமைப்படுத்தவும், ஆலயத்திலிருந்து நைஸாக வெளியேறியோர் எனக் கருதப்படு வோரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும் நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ். ஊடகம் ஒன்று பின்வரும் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றது;
;கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஆலயத்திற்குச் சென்ற சுகாதாரப் பிரிவினர் ஆலயத்திற்குள் சுகாதார நடைமுறைகளை மீறி அதிக எண்ணிக்கையான மக்கள் கூடுகின்றமையைத் தவிர்க்குமாறும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், முக கவசம் அணிவதைக் கட்டாயமாக்குமாறும் கூறியிருக்கின்றனர்.
இதனையடுத்து நேற்றுவர்கள் ஆலயத்திற்குச் சென்றபோது அங்கு அதிக எண்ணிக்கையான மக்கள் கூடியிருந்தமையுடன், சுகாதார நடைமுறைகள் எவையும் பின்பற்றப்படாமையும் அறியப்பட்டுள்ளது. இதேபோல் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டத்தில் சேவையாற்றும் ஒருவர் கடந்த சில நாள்களாகக் காய்ச்சல் காரணமாக விடுமுறை அறிவித்திருந்த நிலையில் அவரும் ஆலயத்தில் நின்று சாமிகாவியுள்ளார். இதனைடுத்து சாமி காவியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்த நிலையில் 3 பேர் மட்டுமே அங்கு நின்றமையுடன் மிகுதி அனைவரும் ஆலயத்திலிருந்து வெளியேறியிருந்தனர். இதனையடுத்து 3 பேரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆலயத்திற்குள் 14 நாள்களுக்கு பொதுமக் கள் நுழையத் தடைவிதிக்கப்பட்டு தடை உத்தரவு ஆலய சுவரில் ஒட்டப்பட்டது. பூசகர் மற்றும் அவருக்குத் துணை புரிபவர்கள் என 5 பேர் மட்டும் ஆலயத்தில் பூசை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் காய்சலால் பாதிக்கப்பட்டவருடன் சாமி காவிவிட்டு வெளியேறியவர்களை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தேடி பிடித்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.