மன்னாரில் மீண்டும் இந்து மதத்தலங்கள் மீது தாக்குதல்

230 0

மன்னார்- யாழ்.பிரதான வீதி, தள்ளாடி விமான ஓடுபாதை அருகில் காணப்பட்ட இந்துக்களின் சிற்றாலயம், இனம் தெரியாத சந்தேகநபர்களினால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை  சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த சிற்றாலயத்தில் காணப்பட்ட இந்துக் கடவுள்களின் புகைப்படங்கள் ஆலயத்தின் வாசல் பகுதியில் உடைக்கப்பட்டுள்ளதுடன் சில படங்கள் அருகிலுள்ள பற்றைகாடுகளுக்குள் வீசப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன.

அதேநேரத்தில் சிற்றாலயத்தின் வெளிப்பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலையானது குப்பைகள் மற்றும் மரத்துண்டுகளினால் மூடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிற்றாலயமானது தொடர்ச்சியாக இனம் தெரியாத சந்தேகநபர்களால் சேதப்படுத்தப்பட்டுவருகின்ற நிலையில், குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு  பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  மன்னார் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.