கிரிக்கெட் வீரர்களை காலால் நசுக்கி அதன் மேல் இருந்து கொண்டு அரசியல் செய்வதற்குச் சமனானது!

266 0

இலங்கைக்கு உலகளவில் புகழ் சேர்க்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களைக் களங்கப்படுத்தும் வகையில் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்டுள்ள கருத்துகளை வன்மையானக் கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியில் கொழும்பு மாவட்டத்தில் தலைவர் மனோ கணேசனுடன் இணைந்து போட்டியிடும் வேட்பாளர் கலாநிதி வி.ஜனகன் தெரிவித்துள்ளார்.

நேற்று முற்பகல் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே கலாநிதி ஜனகன் தனது கண்டனத்தை வெளியிட்டார்.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது இந்தியாவுடனான இறுதிப் போட்டியில், இலங்கை அணியினர் பணத்துக்காக கிண்ணத்தைத் தாரைவார்த்ததாக முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் கிண்ணத்தை சுவீகரிப்பதற்கான இயலுமை இலங்கை அணியிடம் இருந்த போதிலும், பணத்துக்காக அது தாரைவார்க்கப்பட்டதைத் தாம் பொறுப்புடன் கூறுவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்திருந்தார்.

2011 ஏப்ரல் 2 ஆம் திகதி உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் யாரினது பெயரையும் குறிப்பிடாமல் குற்றம்சாட்டுவது கிரிக்கெட் வீரர்களை காலால் நசுக்கி அதன் மேல் இருந்து கொண்டு அரசியல் செய்வதற்குச் சமனானது என்று கலாநிதி வி.ஜனகன் சுட்டிக்காட்டினார்.

செய்தியாளர் சந்திப்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த கலாநிதி. வி.ஜனகன்,

பொதுவாக, மஹிந்தானந்த அளுத்கமேகே இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதில் சிறந்த வீரர் என்று கூற முடியும். எனவே, எங்களுடைய கிரிக்கெட் வீரர்களை களங்கப்படுத்திப் பேசி அரசியல் செய்வது மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருக்கின்றது.

அத்துடன், களங்கப்படுத்திப் பேசுவது மாத்திரமன்றி அச்சுறுத்தல் மேற்கொள்ளவும் செய்கிறார். இன்று எங்களது சிறுபான்மை மக்களை மிரட்டும் தொனியில் பேசவும் ஆரம்பித்து விட்டார்.

“நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 10 சதவீத முஸ்லிம்கள் மாத்திரம்தான் தங்களுக்கு வாக்களித்தார்கள் என்றும், இந்த முறை பொதுத்தேர்லில் 25 சதவீதம் வாக்களிக்காவிட்டால் அவர்கள் துன்பப்பட நேரிடும் என்ற அடிப்படையில் மஹிந்தானந்த தெளிவாக கூறியிருக்கின்றார்.

“நாம் இதனை உற்று நோக்கினால், அரசாங்கத் தரப்பில் இருக்கக் கூடிய ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் அமைச்சர் வீரமாக இந்த வசனத்தை மிரட்டும் தொனியில் கூறுகிறார் என்றால், அவருக்கு யார் இந்த தைரியத்தை கொடுத்தார் என்று நான் கேட்க விரும்புகின்றேன்.

“இதை ஒரு மிக முக்கியமான பிரச்சினையாகப் பார்க்க வேண்டும் என்பதுடன், இன்று மதவாதம் மாத்திரமன்றி மிரட்டுகின்ற தொனியும் ஆரம்பித்து விட்டால், பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் அவர்களின் மதவாதத்தின் அடிப்படையில் வெற்றி பெற்றுவிட்டால் எவ்வளவு சமூக சீரழிவினை சிறுபான்மை சமூகத்தினர் சந்திக்கப் போகின்றார்கள் என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்” என்றும் கலாநிதி வி.ஜனகன் சுட்டிக்காட்டினார்.